Last Updated : 23 Jul, 2021 02:22 PM

 

Published : 23 Jul 2021 02:22 PM
Last Updated : 23 Jul 2021 02:22 PM

புதுச்சேரியில் புதிதாக 98 பேருக்கு கரோனா;  மேலும் 3 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி

புதுச்சேரியில் புதிதாக 98 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் 1.20 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று(ஜூலை 23) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 6,255 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 69, காரைக்கால் - 12, ஏனாம் - 4, மாஹே - 13 பேர் என மொத்தம் 98 (1.57 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் குயவர்பாளையம் கோவிந்தராசு நாயக்கர் வீதியை சேர்ந்த 55 வயது ஆண், வெண்ணிலா நகர் நடுத்தெருவை சேர்ந்த 64 வயது மூதாட்டி, மாஹேவை சேர்ந்த 84 வயது முதியவர் என 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,786 ஆகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 101 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 152 பேரும்(புதுச்சேரி-118, காரைக்கால், 17, ஏனாம்-7, மாஹே-10), வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 766 பேரும்(புதுச்சேரி-591, காரைக்கால்-109, ஏனாம்-18, மாஹே-48) என மொத்தமாக 918 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதிதாக 132 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 397 (97.75 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 14 லட்சத்து 54 ஆயிரத்து 997 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

இதில் 12 லட்சத்து 43 ஆயிரத்து 54 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 6 லட்சத்து 59 ஆயிரத்து 466 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு குழந்தைகளுக்கு தொற்று;

கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள குழந்தைகளுக்கான கரோனா வார்டில் 3 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 5 வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தை, 5 வயதுக்கு மேற்பட்ட ஒரு குழந்தை என 2 குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட தாயுடன் ஒரு குழந்தையும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x