Published : 23 Jul 2021 11:46 AM
Last Updated : 23 Jul 2021 11:46 AM

மோகன் பாகவத் வருகை விவகாரம்; மதுரை துணை ஆணையர் பணி விடுவிப்பு ரத்து செய்யப்பட வேண்டும்: அண்ணாமலை

அண்ணாமலை: கோப்புப்படம்

சென்னை

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்தியத் தலைவர் மோகன் பாகவத் மதுரை வருகைக்காக, மாநகராட்சி அதிகாரிகளுக்குப் பராமரிப்புப் பணிகள் குறித்துக் கடிதம் அனுப்பிய மதுரை துணை ஆணையர் சண்முகம் விடுவிக்கப்பட்டதற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அண்ணாமலை இன்று (ஜூலை 23) வெளியிட்ட அறிக்கை:

"ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் அமைப்பின் அகில இந்தியத் தலைவர் மோகன் பாகவத் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அமைப்பின் நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்திப்பது வழக்கமான ஒன்று. ஆங்காங்கே ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கேற்பார். இவருக்கு உயர்மட்ட பாதுகாப்பான 'இசட் பிரிவு' பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

உலகின் பெரிய சேவை அமைப்புகளில் ஆர்எஸ்எஸ் முதன்மையாகத் திகழ்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கும், இந்திய மக்களின் உயர்வுக்கும் சேவை ஆற்றுகிற அமைப்பாக ஆர்எஸ்எஸ் விளங்குகிறது.

மோகன் பாகவத் மதுரை, கன்னியாகுமரி பகுதிகளில் 22 முதல் 26 வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இவர் மதுரை வருகைக்கான ஏற்பாடுகளை அங்கு உள்ள அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். நாட்டின் 'அதி உயர் பாதுகாப்பு' கொண்ட தலைவர் வருகையின்போது வழக்கமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதைப் பின்பற்றி மதுரை மாநகராட்சி நிர்வாகிகள் செயல்பட்டுள்ளனர்.

இதற்கென மதுரை துணை ஆணையர் சண்முகம், மாநகராட்சி அதிகாரிகளுக்குப் பராமரிப்புப் பணிகள் குறித்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்காக, தமிழக அரசு அவரைப் பணி விடுவிப்பு செய்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.

யார் யார் வந்தால் என்னென்ன பராமரிப்பு, பாதுகாப்பு என்பதற்குத் தமிழக அரசு தனியாகப் பட்டியல் வைத்திருக்கிறதா? பாதுகாப்புப் பட்டியலில் இருக்கும் தலைவர்கள் வரும்போது அவர்களுக்கு உரிய வசதி செய்து கொடுப்பது சட்ட விரோதமா? இந்த நடவடிக்கையின் மூலம் அரசு அதிகாரிகள் எந்த வகையில் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு விரும்புகிறது என்று புரியவில்லை.

திமுகவின் சாமானியத் தலைவர்கள் சென்றால் கூட, மாநகராட்சி அதிகாரிகளே நேரில் சென்று சாலை சீரமைப்பு, அனைத்து விதமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், அரசு தாங்கள் விரும்பாத அமைப்பின் மிக முக்கியமான தலைவர் வருகைக்கான ஏற்பாடுகளை வழக்கம்போல் செய்த அதிகாரிக்கு தண்டனை கொடுப்பது நியாயமா? மேலும் இத்தகைய நடவடிக்கை தவறான முன்னுதாராணம் ஆகிவிடும்.

தமிழக அரசு நேர்மையாகப் பாரபட்சமின்றி நடந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றால், துணை ஆணையர் சண்முகம் பணி விடுவிப்பு ரத்து செய்யப்பட வேண்டும். இல்லையென்றால், திமுக ஆட்சியின் ஒருதலைப்பட்சமான செயலையும், அதிகாரிகளைப் பழிவாங்குகிற செயலையும் மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் செல்லப்படும்".

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x