Published : 23 Jul 2021 10:36 AM
Last Updated : 23 Jul 2021 10:36 AM

குறு, சிறுதொழில்கள்; மீட்புத் திட்டங்கள் மீது மத்திய அரசு எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளவில்லை: சு.வெங்கடேசன் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

சு.வெங்கடேசன்: கோப்புப்படம்

புதுடெல்லி

குறு, சிறு தொழில்கள் கோவிட் காலத்தில் எதிர்கொள்ளும் இன்னல்கள், அரசின் மீட்புத் திட்டங்கள் பற்றி மக்களவை மார்க்சிஸ்ட் உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய குறு, சிறு தொழில்கள் அமைச்சர் நாராயண ரானே பதில் அளித்துள்ளார்.

"இந்திய தொழிலகங்களின் ஒருங்கிணைவு ( Consortium of Indian Associations) 81,000 தொழிலகங்களில் நடத்திய ஆய்வில் 88 சதவீதமான சுயதொழில், குறு சிறு தொழில்களுக்கு மத்திய அரசு அறிவித்த மூன்று மீட்புத் திட்டங்களின் பயன்கள் சென்றடையவி‌ல்லை என்று முடிவுகள் வெளியாகின. இதுபோன்ற ஆய்வை அரசு செய்துள்ளதா? செய்திருந்தால் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன?" என்ற கேள்விகளை எழுத்து மூலமாக சு.வெங்கடேசன் எழுப்பியிருந்தார்.

இதற்கு எழுத்து மூலமாக மத்திய குறு, சிறு தொழில்கள் அமைச்சர் நாராயண ரானே அளித்த பதில்:

"மீட்புத் திட்டங்கள் மீது எந்த ஒரு ஆய்வும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், தேசிய சிறு தொழில் கழகம், காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் ஆகிய அமைப்புகள் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நிறுவனங்கள் எவ்வாறு பேரிடர் காலத்தில் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன என்பதை ஆய்வு செய்து அளித்துள்ளன.

ஐந்து முக்கியப் பிரச்சினைகள்

91 சதவீத நிறுவனங்கள் செயல்பட்டுள்ளன. ஆனால், ஐந்து முக்கியப் பிரச்சினைகளை அவை எதிர் நோக்கி உள்ளன. நிதி நீர்மம் 55% நிறுவனங்களிலும், புதிய ஆர்டர்கள் 17 சதவீதத்துக்கும், தொழிலாளர்கள் பிரச்சினை 9 சதவீதத்திலும், கச்சா பொருள் பற்றாக்குறை 8 சதவீதத்திலும் பிரச்சினைகளாக உள்ளன என்று, தேசிய சிறு தொழில் கழக ஆய்வு தெரிவி்த்துள்ளது.

மத்திய குறு, சிறு தொழில்கள் அமைச்சர் நாராயண ரானே

88% பாதிப்பு

காதி மற்றும் கிராமத் தொழில் ஆணைய ஆய்வு முடிவுகளின்படி, 88% பயனாளிகள் தாங்கள் கோவிட்‌ காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 12% பயன் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

காதி மற்றும் கிராமத் தொழில் ஆணைய ஆய்வு முடிவுகளின்படி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் 88% நிறுவனங்களில் 57% நிறுவனங்கள் பேரிடர் காலத்தில் தங்கள் தொழில்களை சில காலம் மூடவேண்டி வந்தது எனவும், 30% நிறுவனங்கள் உற்பத்தி, வருவாய் சரிவைச் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளன.

நாங்கள் பயன்பெற்றோம் எனக் கூறும் 12% நிறுவனங்களில் 65% தாங்கள் சுகாதாரத் துறை மற்றும் சில்லறை வியாபாரம் சார்ந்தவை எனத் தெரிவித்துள்ளன.

சம்பளம் கிடைத்ததா?

47 சதவீத நிறுவனங்கள் மட்டுமே சம்பளத்தை முழுமையாகக் கொடுத்தவர்கள்; 42 சதவீத நிறுவனங்கள் சம்பளத்தைப் பகுதியாகக் கொடுத்தவர்கள்; 11% சம்பளமே தராதவர்கள் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பெரும்பாலான பயனாளிகள் கூடுதல் நிதி உதவி தேவை என்றும், வட்டி தள்ளுபடி தேவை எனவும், சந்தைப்படுத்த அரசின் ஆதரவு தேவை என்றும் தெரிவித்துள்ளன".

இவ்வாறு மத்திய அமைச்சர் நாராயண ரானே பதிலளித்துள்ளார்

இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள சு.வெங்கடேசன், "அமைச்சர் தெரிவித்துள்ள இரண்டு ஆய்வுகளுமே சுயதொழில், குறு, சிறுதொழில் நிறுவனங்கள் படும்பாடுகளை விவரிக்கிறது. ஆனால், மீட்புத் திட்டங்களின் தாக்கம் பற்றி எந்த ஆய்வும் அரசின் தரப்பில் செய்யப்படவில்லை என்று அமைச்சர் கூறி இருப்பது வருத்தம் அளிக்கிறது. அரசின் திட்டங்கள் செயலாக்கம் குறித்த ஆய்வுகள் இல்லாவிடில், எப்படி உரிய வகையில் பயன்கள் போய்ச் சேரும். அரசு உடனே குறு சிறு தொழில்களைப் பாதுகாக்கத் தலையிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x