Published : 23 Jul 2021 07:11 AM
Last Updated : 23 Jul 2021 07:11 AM

அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியர்கள் பி.எஃப். குறித்து தகவல் பெற ஐவிஆர்எஸ் சேவை: மாநில கணக்காயர் அலுவலகம் அறிமுகம்

சென்னை

தமிழகத்தில் அனைத்து நிலை அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியர்கள் வருங்கால வைப்புநிதி (பி.எஃப்)தொடர்பாக தகவல் பெற ஐவிஆர்எஸ் சேவையை மாநில கணக்காயர் அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது.

24 மணி நேர சேவை

பல்வேறு அரசு, தனியார் துறைகளின் சேவை சார்ந்த தகவல்களைபயனாளிகள் 24 மணி நேரமும் பெறுவதற்கு ஏதுவாக, ஐவிஆர்எஸ்(Interactive Voice Response System) சேவை சமீபகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்போது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட குரல் பதிவு மூலம் பதில் அளிக்கப்படும். இந்த சேவை தற்போது மாநில கணக்காயர் அலுவலகத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதுநிலை துணை மாநில கணக்காயர் ந.தினகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகம் மேம்படுத்தப்பட்ட ஐவிஆர்எஸ் முறையை கடந்த ஜூலை 14-ம் தேதி அறிமுகம் செய்துள்ளது. 044 - 24325050 என்ற எண்ணை தொடர்புகொண்டு இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பல்வேறு தகவல்களை பெறலாம்

தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள், ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை, மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் பொது சேமநல நிதி, ஆசிரியர் சேமநல நிதி சந்தாதாரர்கள் தங்கள்வருங்கால வைப்புநிதி நடப்பு மற்றும் இருப்பு, நடப்பு ஆண்டில் பெற்ற கடன், விடுபட்ட தொகை மற்றும் கணக்கில் உள்ள இறுதித் தொகையை பெற அனுப்பப்பட்ட விண்ணப்பத்தின் நிலை ஆகியவை குறித்த விவரங்களை இந்தசேவை மூலம் அறிந்து கொள்ள லாம்.

தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியுள்ள மேற்குறிப்பிட்ட அதிகாரிகள், ஓய்வூதியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகள் உள்ளிட்ட அரசு சாரா கல்வி நிறுவனங்களின் பணியாளர்கள் ஆகியோர் ஓய்வூதிய விண்ணப்பங்களின் நிலையை அறியவும் இந்தவசதியை பயன்படுத்திக் கொள்ள லாம்.

தமிழகத்தில் ஓய்வூதியம் பெறும்மற்ற அரசு ஓய்வூதியர்கள், சிறப்புபிரிவின் கீழ் கலைஞர் ஓய்வூதியம், தமிழ் அறிஞர் ஓய்வூதியம், சம்ஸ்கிருத அறிஞர் ஓய்வூதியம் தொடர்பான விண்ணப்பங்களின் நிலையை அறியவும் இந்த வசதி பயன்படும். அதிகாரிகள் தங்கள் ஊதியச் சீட்டை பதிவேற்றுதல் குறித்த தகவல்களையும் இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x