Published : 23 Jul 2021 07:11 AM
Last Updated : 23 Jul 2021 07:11 AM

17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மழைபெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 23-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைபெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.

24-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்,தென்காசி ஆகிய மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்மிதமான மழையும், 25, 26-ம் தேதிகளில் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் வரும் 24-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். தெற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் வரும் 26-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x