Published : 23 Jul 2021 07:12 AM
Last Updated : 23 Jul 2021 07:12 AM

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் சுற்றித் திரியும் காட்டு யானைகள்

குன்னூர்

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் காட்டு யானை வலம் வந்ததால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வனப்பகுதி பசுமைக்கு திரும்பி வருகிறது.

மேலும், தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் ஊடுபயிராக உள்ள பலா மரங்களில் விளைச்சல் அதிகரித்திருக்கிறது. இதையொட்டி, சமவெளிபகுதிகளில் இருந்து காட்டு யானைகள் வருகை அதிகரித்துள்ளது.

குறிப்பாக குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வடுகன் தோட்டம், குறும்பாடி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம்உள்ளது. அவ்வப்போது, சாலையைகடந்து செல்வதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் காட்டேரி பூங்கா பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை குட்டிகளுடன் காட்டு யானை நடமாடியது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். சுமார் அரை மணி நேரத்துக்குப் பிறகு யானைகள் அங்கிருந்து சென்ற பிறகு வாகனப் போக்குவரத்து தொடங்கியது.

வனத்துறையினர் கூறும்போது, "உணவு தேடி காட்டு யானைகள் அலைந்து திரிகின்றன. அடிக்கடி சாலையை கடக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. அவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. யானைகளை கண்டால் வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும். வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x