கோயில் யானைகள் பராமரிப்புக்கு மாவட்ட குழுக்கள் அமைப்பது குறித்து முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயில் யானைகள் பராமரிப்புக்கு மாவட்ட குழுக்கள் அமைப்பது குறித்து முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on

கோயில் யானைகள் பராமரிப்புக்கு மாவட்ட வாரியாக குழுக்கள் அமைப்பது குறித்தும், கோயில்களில் உள்ள கால்நடைகள் பராமரிப்பு குறித்தும் தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அறி்க்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி ஆகிய 2 யானைகளை பராமரிப்பது குறித்தும், பாகன்களை நியமிப்பது குறித்தும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தரங்கராஜன் நரசிம்மன் என்பவர்பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்ட விதிகளின்படி கோயில் யானைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறையும், வனத் துறையும் இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், இதுதொடர்பாக வனத் துறை முதன்மை தலைமை வன பாதுகாவலர் அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு சட்டப்படி மாவட்டவாரியாக குழுக்கள் அமைக்கப்படவில்லை என்றும், கோயில் யானைகளுக்கு பாகன்கள் இல்லை என்றும், கோயில்களில் உள்ள கால்நடைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

அவகாசம் கோரி விண்ணப்பம்

அப்போது அரசு தரப்பில், தமிழக வனத் துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து இந்த விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், கோயில் யானைகள் பராமரிப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக குழுக்கள் அமைப்பது குறித்தும், கோயில்களில் உள்ள கால்நடைகள் பராமரிப்பு குறித்தும் வனத் துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in