Published : 22 Jul 2021 02:39 PM
Last Updated : 22 Jul 2021 02:39 PM

மகள் மரணத்தில் மர்மம்: சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்றக்கோரி தந்தை வழக்கு

மகளின் மரணம் தொடர்பாக காவல்துறை போதிய விசாரணை மேற்கொள்ளாததால் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த முதியவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.வெங்கடேசன் என்கிற 72 வயது முதியவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், ”எனது மகள் ஸ்வர்ண ப்ரியா எம்.டெக். முடித்து பெங்களூருவில் உள்ள டெக்ஸ்கோ நிறுவனத்தில் இரண்டு லட்ச ரூபாய் மாத சம்பளத்தில் பணியாற்றி வந்த நிலையில், திருவாரூரை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரை காதலித்தார். அவரது காதலை அரை மனதுடன் நாங்கள் ஏற்றுக்கொண்ட பிறகு, இருவருக்கும் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரையில் திருமணம் நடந்தது.

மருமகனின் தந்தை சுப்ரமணியன், தாய் திலகவதி, சகோதரர் ராஜகோபால், சகோதரரின் மனைவி வித்யா ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், திருமணமான நாள் முதலே பல்வேறு காரணங்களுக்காக பணம் கேட்டு என் மகளை துன்புறுத்தினர்.

மருமகனின் சகோதரர் ராஜகோபால் நடத்தி வரும் நர்சரி பள்ளியை விரிவுபடுத்துவதற்காக 15 லட்சம் ரூபாயை என் மகளிடம் கேட்டனர். கடன் மூலம் அந்த தொகையை மகள் ஏற்பாடு செய்து கொடுத்த நிலையில், கடனை அடைக்காததுடன், மகளையே திருப்பி செலுத்த சொல்லி கட்டாயப்படுத்தினர்.

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த அண்டு மார்ச் மாதம் முதல் மதுரை கூட்டுக் குடும்பத்தில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில், உயிருக்கு ஆபத்து உள்ளதாக மகள் தெரிவித்ததால் பெங்களூருவுக்கு செல்லும்படி அறிவுறுத்தினோம். அவர் கடந்த ஜனவரி மாதம் கிளம்பியபோது, கணவரும், அவரது சகோதரரும் தடுத்தி நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், திடீரென என் மகள் ஸ்வர்ண ப்ரியா இறந்துவிட்டதாக கடந்த ஜனவரி 18 ஆம் தேதி திருவாரூரில் இருந்து தகவல் வந்ததால், அங்குள்ள திருவாரூர் நகர காவல் நிலையத்திற்கு சென்று, மருமகன் மற்றும் அவர் குடும்பத்தினரால் மகள் கொலை செய்யப்பட்டிருப்பதாக புகார் அளித்தேன். மகளின் மரணம் குறித்து அக்கம்பக்கத்தில் விசாரிக்காமல் காவல் துறை வழக்கு பதிவு செய்தது.

இதனால், விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால் அந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தனது மகன் நிரஞ்சன் மூலமாக ஏப்ரல் 30, மே 7, ஜூன் 24 ஆகிய தேதிகளில் காவல் துறையிடமும், முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் மனு கொடுத்தேன். அதில் நடவடிக்கை எதுவும் இல்லை.

எனவே மகள் ஸ்வர்ண ப்ரியா மரணம் குறித்த திருவாரூர் நகர காவல் நிலைய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x