

கோயில் அன்னதான திட்டத்தில் இருந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில், கோயில்களில் செயல்படுத்தப்பட்ட வரும் அன்னதான திட்டத்தின் மூலமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதானம் மற்றும் நிதியுதவி வழங்குவது தொடர்பாக அறநிலையத் துறை கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்துஹிந்து தர்ம பரிஷத் அமைப்பின் நிர்வாக அறங்காவலரான கே.கே.ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
‘கோயில் அன்னதான திட்டத்துக்காக ஒதுக்கப்படும் நிதியை வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த தமிழக அறநிலையத் துறைக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், இதுதொடர்பான அறிவிப்பையும் ரத்து செய்ய வேண்டும்’ என அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதிசஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வழிபாட்டுத் தலங்களும், பல்வேறு மத அமைப்புகளும் முன்வந்திருப்பது மனதை ஈர்க்கும் வகையில் உள்ளது. இதுதொடர்பான அறநிலையத் துறை மற்றும் தமிழக அரசின்அறிவிப்பில் தலையிட எந்த காரணமும் இல்லை’’ எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், மனுதாரர் எந்த மதத்தை பின்பற்றுபவராக இருந்தாலும் எதிர்காலத்தில் இதுபோல வழக்கு தொடர மாட்டார் என நம்புவதாக நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.