Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM

கும்பகோணம் நிதிநிறுவன அதிபர்கள் வீட்டில் போலீஸ் சோதனை; பண மோசடி புகாரில் பொதுமேலாளர் கைது: 5 பேர் மீது வழக்குப்பதிவு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ் - எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்கள்.

தொழிலதிபர்களான இவர்கள் கும்பகோணத்தில் தனியார் நிதி நிறுவனமும், கொற்கை கிராமத்தில் பால் பண்ணையும் நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளிலும் பல தொழில்கள் செய்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்துள்ளதால் ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என அழைக்கப்படுகின்றனர்.எம்.ஆர்.கணேஷ் பாஜகவில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட வர்த்தகப் பிரிவு தலைவராகவும் இருந்தார்.

இந்நிலையில், இவர்களுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் இரட்டிப்பாகப் பணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவித்து, கும்பகோணம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், வர்த்தகர்கள், பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் வசூல் செய்துஉள்ளனர். இதற்காக ஏஜென்டுகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு கமிஷன் கொடுத்து வந்தனர்.

இதில் பலரும் கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்த நிலையில், கரோனா ஊரடங்கை காரணமாக காட்டிய கணேஷ் – சுவாமிநாதன் சகோதரர்கள், பணம் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பிவழங்கவில்லை என புகார் எழுந்தது.

இந்நிலையில், கணேஷ் - சுவாமிநாதன் சகோதரர்கள் சுமார் ரூ.15 கோடி வரை ஏமாற்றிவிட்டதாக கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா - பைரோஜ் பானுதம்பதியினர் தஞ்சாவூர் மாவட்ட எஸ்பிதேஷ்முக் சேகர் சஞ்சயிடம் கடந்த வாரம்புகார் அளித்தனர். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ‘ரூ.600 கோடி மோசடி செய்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் -இப்படிக்கு, பாதிக்கப்பட்டவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள்’ என கும்பகோணம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தப் போஸ்டர்கள் ஒட்டியவர்கள் யார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜக வர்த்தகப் பிரிவு தலைவர் பதவியில் இருந்து எம்.ஆர்.கணேஷ் விடுவிக்கப்படுவதாக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சதீஷ்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார், நேற்று முன்தினம் இரவு எம்.ஆர்.கணேஷ் - சுவாமிநாதன் மற்றும்நிதி நிறுவன மேலாளர்களை பிடித்துவிசாரித்து வருகின்றனர் மேலும், நேற்றுகாலை கணேஷ் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அதன்பின்பு எம்.ஆர்.கணேஷ் - எம்.ஆர்.சுவாமிநாதன் மற்றும் நிதிநிறுவன ஊழியர்கள் ரகுநாதன், மீரா, தர்மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர். மேலும் நிதி நிறுவனபொதுமேலாளராக காந்த்தை மாவட்டகுற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x