Published : 22 Jul 2021 03:13 AM
Last Updated : 22 Jul 2021 03:13 AM

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் முதலீடுகளை ஈர்க்க புதிய கொள்கை திட்டங்கள்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

கோவை

தமிழகத்தில் அதிக முதலீடுகளை ஈர்க்க புதிய கொள்கை திட்டங்களை வகுக்க உள்ளோம் என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கோவையில் பீளமேடு விளாங்குறிச்சி பகுதியில் உள்ள டைடல் பார்க் வளாகத்தில், எல்காட் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலக் கட்டிடம் ரூ.114.16 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, விளாங்குறிச்சி டைடல் பார்க் வளாக கூட்டரங்கில், தகவல் தொழில்நுட்ப நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து அமைச்சர் த.மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் 4.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பை படித்து முடித்து வெளியே வருகின்றனர். தகவல் தொழில்நுட்பத்துறையில் 1.5 லட்சம் இளைஞர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கும் நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, தகவல் தொழில்நுட்பத்துறையை மேம்படுத்தி, தமிழகத்திலேயே அதிகளவில் வேலை வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தகவல் தொழில்நுட்பத்துறையில், தமிழ்நாடு தற்போது 5-வது இடத்தில் உள்ளது. அதிலிருந்து தமிழகத்தை முதன்மை மாநிலமாக முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தகவல் தொழில்நுட்பத்துறையில், சென்னைக்கு அடுத்து கோவை சிறந்து விளங்குகிறது. விளாங்குறிச்சியில் ரூ.114.16 கோடி மதிப்பில் எல்காட் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலக் கட்டிடம் கட்டும் பணி விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். தென் மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் தோற்றுவித்து, அதிகளவில் வேலை வாய்ப்பை உருவாக்கித் தர திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் சிறப்பான முறையில் விரிவுபடுத்தப்படும். கடந்த 10 ஆண்டுகளில் அண்டை மாநிலங்களில் தொழில் முதலீடுகளை ஈர்த்தது போல், தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகள் நடைபெறவில்லை. தமிழகத்துக்கு வர வேண்டிய முதலீடுகள் கடந்த 10 ஆண்டுகளில் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்குச் சென்று விட்டன.

எனவே, இனிவரும் காலங்களில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் தொடரும். அதிக முதலீடுகளை ஈர்க்க புதிய கொள்கை திட்டங்களை வகுக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x