Last Updated : 22 Jul, 2021 03:14 AM

 

Published : 22 Jul 2021 03:14 AM
Last Updated : 22 Jul 2021 03:14 AM

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டு முதல் 50 சத இடங்களை அரசு ஒதுக்கீடாக பெறுமா புதுச்சேரி அரசு? - மத்திய அரசின் உத்தரவை பின்பற்றினால் 789 இடங்கள் கிடைக்கும்

புதுச்சேரி உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டு முதல் 50 சத இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற்று கலந்தாய்வு நடத்துமா என்று இளையோர் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதை நடை முறைப் படுத்தினால் 789 மருத்துவ இடங்கள் புதுச் சேரிக்கு கிடைக்கும்.

இந்திய மருத்துவ கவுன்சில் குழுவை ரத்து செய்து கலைத்து விட்டு, புதிதாக 2019ல் தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் 50 சத இடத்தை பெற இச்சட்டம் வழிவகுக்கிறது.

ஏழை எளிய மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசு இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இச்சட்டத்தின்படி, மாநிலங்களில் இயங்கும் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த மருத்துவ இடங்களில் 50 சதவீத மருத்துவ இடங்களை மாநில மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த கலந் தாய்வு மூலம் மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்க வேண்டும். 50 சதவீத இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு மாநில அரசுகளே குழு அமைத்து கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து கொள்ளலாம்.

2019 தேசிய மருத்துவ ஆணைய மசோதா சட்டத்தின் படி நடப்பு கல்வியாண்டு முதல் புதுச்சேரியில் இயங்கும் அனைத்து (நிகர் நிலைமருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் மருத்துவ கல்லூரி ) மருத்துவ கல்லூரிகளின் மருத்துவ இடங்களை 50 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சென்டாக் மூலம் கலந்தாய்வை நடத்தி மாநில மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள் - பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி கூறுகையில், "சென்ற ஆண்டே புதுச்சேரியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு இச்சட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மத்தியிலுள்ள கட்சியே மாநிலத் திலும் கூட்டணியில் உள்ளது.

இச்சட்டத்தை இப்போதே நிறைவேற் றினால், நடப்பாண்டில் மத்திய அரசு உத்தரவுப்படி மருத்துவக்கல்லூரிகளிடம் 50 சதவீதம் இடங்களை பெறலாம். அதன்மூலம் 789 மருத்துவ இடங்கள் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு கிடைக்கும். அதுவரை சென்டாக் நிறுவனத்தின் மூலம் வெளியிடப்படும் விவர பதிவேட்டில் (Prospects) தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கை செய்ய வேண்டும். இதன் முதற்கட்டமாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருக்கின்ற 50 சதவித இடஒதுக்கீட்டு கோப்பினை ஆணையாக பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x