

தமிழகத்தை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும், மாற்ற முடியும் எனும் இலக்கினை முதன்முதலில் முன்வைத்த கட்சி மக்கள் நீதி மய்யம் என, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தொழில்துறை சார்பில் நேற்று (ஜூலை 20) நடைபெற்ற 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு' விழா நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்துவதே எங்களது அரசின் லட்சியம்.
2030-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக (GDP Economy) தமிழகத்தை உருவாக்குவதே, எங்கள் அரசின் குறிக்கோள். அந்த இலக்கை நோக்கிப் பயணிக்க, முதலீட்டாளர்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
தொழில் புரிவதை மிகவும் எளிதாக்கிடவும், அதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கிடவும், நான் உறுதி பூண்டுள்ளேன். முதலீட்டாளர்கள் தொழில் தொடங்கத் தேவையான அனைத்து அனுமதிகளையும் உடனுக்குடன் பெற்று, தங்களது திட்டத்தை விரைவாகவும், எளிதாகவும் நிறுவுவதற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0 தொடங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜூலை 21) தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தை ஒன் (ONE) டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும், மாற்ற முடியும் எனும் இலக்கினை முதன்முதலில் முன்வைத்த கட்சி மக்கள் நீதி மய்யம். இப்போது தமிழக முதல்வரும் 2030-ல் அந்த இலக்கை எட்டும் பாதையைத் தேர்ந்துள்ளார் என்பதில் மகிழ்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.