Published : 21 Jul 2021 03:14 AM
Last Updated : 21 Jul 2021 03:14 AM

தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த 17 குழந்தைகள்: முதல்கட்டமாக 3 பேருக்கு தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு

திருப்பூர் மாவட்டத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளுக்கு, அரசு சார்பில் ரூ.15 லட்சம் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் 17 குழந்தைகள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.

கரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு, தமிழக அரசின் உத்தரவுப்படி தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும். 18 வயது நிறைவடையும்போது, அந்த தொகை வட்டியுடன் வழங்கப்படும். பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுடன் இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு ரூ. 3 லட்சம் உடனடி நிவாரணம் வழங்கப்படும்.

இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில், முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம், பட்டப்படிப்பு வரை கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்.

பெற்றோர் இருவரையும் இழந்து உறவினர் அல்லது பாதுகாவலர்கள் ஆதரவில் வளரும் குழந்தையின் பராமரிப்பு செலவாக, 18 வயது நிறைவடையும் வரை மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

இதுதொடர்பாக குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் கூறும்போது, "தமிழகத்தில் அதிகபட்சமாக, திருப்பூர் மாவட்டத்தில் கரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த 17 குழந்தைகள், பெற்றோரில் ஒருவரை இழந்த 134 குழந்தைகள் என மொத்தம் 151 குழந்தைகளுக்கு நிவாரணம் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், முதல்கட்டமாக பெற்றோர் இருவரையும் இழந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் என ரூ.15 லட்சம் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை நாங்களே கண்டறிந்து, அரசின் நிவாரணத் தொகை கிடைக்க வழிவகை செய்து வருகிறோம். இருப்பினும், இதுபோன்ற குழந்தைகள் தங்கள் பகுதியில் இருப்பது தெரியவந்தால், 0421- 2971198 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயர் மற்றும் முகவரியை கூறினால் விசாரணை நடத்தி நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x