

திருநெல்வேலி பாளையங்கோட்டை கேடிசி நகர் ஹவுசிங் போர்டு காலனி எல்.ஜி. நகரைச் சேர்ந்த கோயில்பிச்சை மனைவி உஷா (42) . தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் புரோகிராமராக பணிபுரிந்த இவர், விருப்ப ஓய்வு பெற்றிருந்தார். கடந்த சில மாதங்களாக வீட்டில் மாணவிகளுக்கு டியூசன் சொல்லிக்கொடுத்து வந்தார். இவருக்கு நீனா, ரீனா என்று இரு மகள்கள் உள்ளனர். பட்டப்படிப்பு முடித்துள்ள இவர்கள் இருவரும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலையில் வீட்டிலிருந்து உஷாவின் அலறல் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். ஆனால் வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் பாளையங்கோட்டை தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்குவந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பலத்த காயங்களுடன் உஷா கொலை செய்யப்பட்டு கிடந்தார். கம்பியால் அடித்தும், கத்தியால் குத்தியும் அவர் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அதேநேரத்தில் தாயாரின் உடல் அருகே இரு மகள்களும் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். இரு மகள்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.