Published : 20 Jul 2021 07:59 PM
Last Updated : 20 Jul 2021 07:59 PM

சென்னையில் போடப்பட்ட தடுப்பூசிகள் குறித்த முழு விவரம்: மாநகராட்சி சுகாதாரத்துறை துணை ஆணையர் தகவல்

சென்னை

சென்னையில் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டவர்கள் குறித்த முழு விவரத்தை சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை துணை ஆணையர் இன்று தெரிவித்தார். 18 முதல் 44 வயது வரை உள்ளோர், 45 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் எனப் பிரிவு வாரியாக விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தின் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் கரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள மாதிரிகள் சேகரிக்கப்படுவதைத் துணை ஆணையர் (சுகாதாரம்) எஸ்.மனிஷ், இன்று (20.07.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

''கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், சென்னையில் கரோனா தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ள ஆர்டிபிசிஆர் (RTPCR) அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தின் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இன்று பரிசோதனைகள் மேற்கொள்ள சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கோவிட் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் மற்றும் காசநோய் உள்ளவர்களுக்குத் தற்பொழுது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

45 வயதிற்கு மேற்பட்ட 20,45,447 நபர்களில் 15,04,586 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் 7,31,120 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும், 18-45 வயதிற்குட்பட்ட 35,16,474 நபர்களில் 5,73,683 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் 49,267 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும், மாற்றுத்திறனாளிகள் 24,262 நபர்களில் 10,435 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் 1,171 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

இணை நோய் உள்ள 28,36,586 நபர்களில் 3,65,911 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் 1,93,738 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும், காசநோய் உள்ள 1,696 நபர்களில் 282 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் 91 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும், கர்ப்பிணிகள் 64,152 நபர்களில் 3,784 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் 88 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும், பாலூட்டும் தாய்மார்களில் 3,739 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் 88 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சியின் இத்தகைய நடவடிக்கைகளுடன் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்களும் பங்களிக்க வேண்டும். தமிழக அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும், அலுவலகங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும்போதும் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும், கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி திரவங்கள் கொண்டு சுத்தம் செய்வதன் மூலமும் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இதற்கு பொதுமக்களும் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்''.

இவ்வாறு சென்னை மாநகராட்சி துணை ஆணையர் எஸ்.மனிஷ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல அலுவலர் ஜெ.ரவிக்குமார், மாநகர நல அலுவலர் (பொ) எஸ்.மகாலட்சுமி, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தின் நிர்வாக அலுவலர் ராமசுந்தரம், மண்டல நல அலுவலர் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x