Last Updated : 20 Jul, 2021 03:14 AM

 

Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM

மாமல்லபுரத்தில் ரூ.18 கோடி மதிப்பிலான புதிய பேருந்து நிலைய ஒப்பந்தம் ரத்து?- பொதுப்பணித் துறை மூலம் பணிகளை மேற்கொள்ள கோரிக்கை

மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் ரூ.18 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்காக தனியார்நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச சுற்றுலாதலமான மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோயில் முகப்பில் குறுகிய இடத்தில் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நிறுத்துவதற்காக புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையொட்டி, கருகாத்தம்மன் கோயில் அருகே 6.79 ஏக்கர் பரப்பளவில், நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க கடந்த 1992-ல் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் ஒப்புதல் வழங்கியது. ஆனால், நிலம் மற்றும் நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு பணிகளால் திட்டப் பணிகள் தாமதமாகின.

கடந்த 2017-ல் தமிழக அரசு மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தது. இதற்காக ரூ.18 கோடிநிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, புதுநகர் வளர்ச்சிக் குழுமம், மத்திய பொதுப்பணித் துறை மூலம் பணிகளை மேற்கொண்டது.

இதில், ஈசிஆர் சாலையில் வரும் வாகனங்கள் மற்றும் நகரப் பகுதி வாகனங்கள் வந்து செல்லும் வகையில், நான்கு பாதைகளும். கழிப்பறைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் பயணிகளுக்கான ஓய்வறைகள், உள்ளூர் வாகனங்களை நிறுத்த இடவசதி உள்ளிட்ட வசதிகளுடன், சுமார் 50 பேருந்துகள் நிறுத்தும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிட்டப்பட்டது.

மத்திய பொதுப்பணித் துறை, ஒப்பந்தப் புள்ளி மூலம் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு இத்திட்டப் பணிகளை வழங்கியது. இந்நிலையில், பேருந்து நிலையம் அமைய உள்ள நிலப் பகுதியில் மண் கொட்டி சமன்படுத்த வேண்டியுள்ளது. இதற்கான மண் எடுக்கும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்காமல் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தாமதப்படுத்தப்பட்டது. இதனால், தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள முடியாது என புதுநகர் வளர்ச்சிக் குழுமத்துக்கு, மத்திய பொதுப்பணித் துறை கடிதம்வழங்கியுள்ளது. மேலும், தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.

உள்ளூர் மக்கள் கோரிக்கை

இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறும்போது, "நகருக்குள் வரும் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதற்குத் தீர்வாக புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவலால், அனைவரும் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே, மாநில அரசின் பொதுப்பணித் துறை மூலம் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x