புதுச்சேரி அருகே பரிதாபம்: பெங்களூரை சேர்ந்த மூவர் உட்பட 4 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு - மருத்துவமனையில் ஒருவருக்கு தீவிர சிகிச்சை

புதுச்சேரி அருகே பரிதாபம்: பெங்களூரை சேர்ந்த மூவர் உட்பட 4  பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு - மருத்துவமனையில் ஒருவருக்கு தீவிர சிகிச்சை
Updated on
1 min read

புதுச்சேரியை அடுத்த சின்ன வீராம்பட்டினம் பகுதியில் கடலில் குளித்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மூவர் உட்பட 4 பேர் கடலில் மூழ்கி இறந்தனர்.

பெங்களூருரைச் சேர்ந்தவர்கள் ராஜீவ்(25), அமித்(25), ஆஷிஷ்(24) மற்றும் இவர்களது தோழி இகா(26). ஐசிஐசிஐ வங்கியில் பணிபுரிந்து வந்த இவர்கள் அனைவரும் தங்கள் நண்பர்கள் 2 பேருடன் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று மாலை புதுச்சேரி அடுத்த சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு சென்றனர். இவர்களில் அமித், ராஜீவ் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அதே சமயத்தில், பெங்களூருரைச் சேர்ந்த கலோன்(27), ஆந்திராவைச் சேர்ந்த சுமந்த்(27) ஆகியோரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கிய ராஜீவ் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். உடனே அமித், கலோன், சுமந்த் ஆகிய மூவரும் அவரை காப்பாற்ற சென்றனர். அவர்களும் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். உள்ளூர் மாணவர் இசைவாணன்(18) என்பவர் அவர்களை காப்பாற்ற கடலுக்குள் சென்றார். அவரையும் அலை இழுத்துச் சென்றது.

உடனே, அந்தப் பகுதி மீனவர்கள் விரைந்து வந்து கடலில் தத்தளித்த 5 பேரையும் மீட்க சென்றனர். எனினும் ராஜீவ், அமித், சுமந்த் ஆகிய 3 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கலோன் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in