Last Updated : 20 Jul, 2021 03:15 AM

 

Published : 20 Jul 2021 03:15 AM
Last Updated : 20 Jul 2021 03:15 AM

மக்கள் குறைதீர்வுக்கூட்டம் நடத்த அரசு அனுமதிக்காத நிலையில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற அதிகாரிகள்

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது அரசு சார்பில் நடத்தப்பட்டு வந்த மக்கள் குறைதீர்வுக்கூட்டம், விவசாயிகள் குறைதீர்வுக்கூட்டம் உள்ளிட்ட கூட்டங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. மாறாக, பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போடவும் அறிவுறுத்தப்பட்டிருந் தது.

இந்நிலையில், கரோனா பாதிப்பு பெரும் அளவில் குறைந்ததால் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது போக்கு வரத்து தொடங்கியதால் திருப் பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வந்த ‘மக்கள் குறை தீர்வுக்கூட்டம்’ வழக்கம்போல நடைபெறும் என எண்ணிய 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்குக்கு நேற்று வந்தனர்.

மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்ட அரங்க வளாகத்தில் நூற்றுக் கணக்கான மக்கள் கையில் மனுக்களுடன் காத்திருந்தனர். மக்கள் குறை தீர்வுக்கூட்டம் நடத்த அனுமதியில்லை என்பதை மறந்த அரசு அதிகாரிகள் அங்கு வந்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன் மற்றும் உயர் அதிகாரிகள் திடீரென பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற தொடங்கினர். இதைக்கண்டதும், மனுக்களை வழங்க சமூக இடைவெளியை மறுத்து அங்கு அதிக அளவில் பொதுமக்கள் திரண்டனர்.

இதனால், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கம் மக்கள் கூட்டத்தால் நிரம்பியது. இதைக்கண்டதும், மாவட்ட வருவாய் அலுவலர் திடீரென மனுக்கள் பெறுவதை தவிர்த்து அங்கிருந்து வேகமாக வெளியேறினார். அவரை தொடர்ந்து, பிற அரசு அதிகாரிகளும் அங்கிருந்து வெளியேறினர்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும் மக்கள் குறைதீர்வுக்கூட்டம் உள்ளிட்ட எந்த கூட்டங்களையும் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்காத நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு தடையை மீறி அதிகாரிகளே மக்களிடம் மனுக்களை பெற்ற சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து அரசு அதிகாரி களிடம் கேட்டபோது, ‘மனுக்களை பெட்டியில் தான் போட வேண்டும் என அறிவுறுத்தியும் அதிகாரி களிடம் வழங்க பொதுமக்கள் திரண்டதால் ஒரு சில மனுக்களை பெற வேண்டிய சூழ்நிலை உருவா கியது. அதன்படி சில மனுக்கள் பெறப் பட்டன. கூட்டம் அதிகமாக கூடியதால் மனுக்கள் பெறுவது தவிர்க்கப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் வழக்கம்போல் பெட்டியில் தான் செலுத்தினர்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x