Published : 19 Jul 2021 08:34 PM
Last Updated : 19 Jul 2021 08:34 PM

மூன்றாம் அலை வந்தாலும்கூட மக்களைக் காப்பாற்ற அரசு தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் இருக்கின்ற பெரிய மருத்துவமனைகளைத் தவிர்த்து, 100 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகின்ற மருத்துவமனைகளும் முழுவதுமாக ஆக்ஸிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் அலை வந்தாலும்கூட மக்களைக் காப்பாற்ற அரசு தயார் நிலையில் உள்ளது என மக்கள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று, கே.கே.நகரில் உள்ள அரசு ஈட்டுறுதி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முழு கவச உடை அணிந்து கரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
அரசு புறநகர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் பிளான்ட்டையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்ததாவது:

கே.கே.நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலையின்போது கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடுதலான நிலையில் அரசு புறநகர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் அமைக்கப்பட்டது.

மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 2 கி.லி அளவு ஆக்ஸிஜன் டேங்க் ஒன்று நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் சி.எஸ்.ஆர். நிதியில் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் வசதியும் அமைத்துக் கொடுக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்த மருத்துவமனையின் பின்புறம் இருக்கிற மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு எத்தனை சதவிகிதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கண்டறிந்து அவர்களுக்கு சான்று அளிக்கிற பணியை செய்கின்றனர். பல ஆண்டுகளாக இங்கு சான்றிதழ் வேண்டி வரும் மாற்றுத்திறனாளிகள் கே.கே.நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையின் பின்புறம் உள்ள வழியை பயன்படுத்த வேண்டியுள்ளதால் பெரிய அளவில் சிரமப்படுவதாகவும், அவர்களுக்கு தனியாக வழியை ஏற்படுத்த வேண்டுமென்று இந்த ஆய்வில் தெரிவித்தனர்.

உடனடியாக பொதுப்பணித்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, இங்கு ஏற்கெனவே உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்று இடிக்கப்பட்டு அது மாற்றுத் திறனாளிகளுக்கான அலுவலகமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை சார்பில் இங்கே மாற்றுத் திறனாளிகளுக்கான தனி வழி அமைக்கப்பட்டு வருகிறது.

இஎஸ்ஐ மருத்துவமனை 550 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. கரோனா தொற்றின் வேகம் இரண்டாம் அலையில் அதிகரித்த நிலையில் இம்மருத்துவமனையில் தினந்தோறும் 150 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சிறந்த மருத்துவ சேவையை இங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தொண்டு மனப்பான்மையுடன் வழங்கியுள்ளனர்.

இதனால் இறப்பு சதவிகிதம் என்பது மிக குறைவான அளவே பதிவாகியிருக்கிறது. இம்மருத்துவமனையில் 6 கி.லி. ஆக்சிஜன் டேங்க் ஒன்று பயன்பாட்டில் இருக்கிறது. கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தபோது, இந்த ஆக்ஸிஜன் டேங்கில் நாளொன்றுக்கு இரண்டு முறை ஆக்ஸிஜன் நிரப்ப வேண்டியிருந்தது. ஆகையால் மத்திய அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் இருக்கிற தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், பொதுப்பணித்துறை ஆகிய இரண்டும் ஒருங்கிணைந்து 70 இடங்களில் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் 20 இடங்களில் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் அமைக்கும் பணிகள் நிறைவுற்று அது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஆக்ஸிஜனை வளிமண்டலத்திலிருந்து பிரித்து எடுத்து, மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பிரதான குழாய்கள் மூலம் நோயாளிகளுக்கு அவர்கள் மூச்சுவிடுவதற்கு ஏதுவாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஜெனரேட்டர் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் மையங்கள் என்பது, மூன்றாம் அலை வந்தாலும்கூட எதிர்காலத்தில் அந்நிலையை எதிர்கொள்வதற்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 இடங்களில் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முதல்வரின் மக்கள் இயக்கம் கோரிக்கை என்பதையேற்று சி.எஸ்.ஆர். நிதியுதவியுடன் 40 இடங்களில் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்றுதான் அரசு புறநகர் மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. சென்னையில் இருக்கின்ற ராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவ மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைகளைத் தவிர்த்து, சென்னையில் இருக்கிற 100 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிற மருத்துவமனைகள் என்கிற வகையில் அண்ணா நகரில் 100 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை, கலைஞர் நகரில் 100 படுக்கைகளுடன் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை, பெரியார் நகரில் 100 படுக்கைகளுடன் கூடிய அரசு மருத்துவமனை, தண்டையார்ப்பேட்டையில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை ஆகியவற்றில் மொத்தம் உள்ள 600 படுக்கைகளும் முழுவதுமாக ஆக்ஸிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் அலை என்று வந்தாலும்கூட கரோனா பேரிடரில் மக்களை காப்பாற்றுவதற்காக இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் ஜெனரேட்டர், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர் ஆகியவை ஏராளமான வகையில் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இருக்கிற அரசு பொதுமருத்துவமனைகளைத் தவிர்த்து, 100 என்கிற படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளிலும் முழுவதுமாக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் முழுவதுமாக அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் அலைக்குப் பிறகு இந்த வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கும் கரோனா பரவும் என்ற அச்சத்தின் காரணமாக, குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க கரோனா வார்டுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுப்பதற்கு தினந்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. நேற்றைக்குக்கூட (ஜுலை 18) தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாகக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நாளையோ அல்லது மறுநாளோ தமிழக முதல்வரே மூன்றாம் அலை பாதிப்பிலிருந்து எப்படி தங்களை தற்காத்துகொள்வது, எந்த மாதிரியான விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது குறித்து எடுத்துச்சொல்ல இருக்கிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x