சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

அரவிந்த்
அரவிந்த்
Updated on
1 min read

14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துத் திருவாருர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்துள்ள கோவிலான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (22). இவர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் 2019-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் அரவிந்த், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பளித்தார். அதன்படி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அரவிந்த்துக்கு 32 ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இதுதொடர்பாக திருவாரூர் எஸ்.பி. சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட போலீஸாருக்குப் பாராட்டு தெரிவிப்பதாகவும், திருவாரூர் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டு நடைபெற்று வரும் அனைத்து வழக்குகளையும் விரைவாக முடிக்கக் காவல்துறை சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in