Published : 19 Jul 2021 05:08 PM
Last Updated : 19 Jul 2021 05:08 PM

நெடுஞ்சாலை ஓரங்கள், அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணி: அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கிவைத்தார்  

ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயத்தில் மரக்கன்று நட்ட உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி.

ஒட்டன்சத்திரம் 

நெடுஞ்சாலை ஓரங்கள், அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், ஊராட்சியில் உள்ள பொது இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோயில் அருகே மலையடிவாரப் பகுதி, கள்ளிமந்தயம் ஆகிய இடங்களில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மரக்கன்றுகளை நட்டு, ஐந்து லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிவைத்தார்.

அதைத் தொடர்ந்து அவர் கூறும்போது, ”திண்டுக்கல் மாவட்டத்தைப் பசுமை சூழல் நிறைந்த மாவட்டமாக மாற்றும் வகையில் ஐந்து லட்சம் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.627.52 லட்சம் மதிப்பீட்டில் 1,56,880 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.

வனத்துக்குள் ’திருப்பூர் வெற்றி’ அமைப்பின் சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகளும், ’விழுதுகள்’ அமைப்பு சார்பில் 15,000 மரக்கன்றுகளும், 25,000 பனை விதைகள் நடவும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிற தன்னார்வ அமைப்புகள் மூலம் என மொத்தம் ஐந்து லட்சம் மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்கப்பட உள்ளன.

நெடுஞ்சாலை ஓரங்கள், அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், ஊராட்சியில் உள்ள பொது இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நடப்படும் மரக்கன்றுகளைத் தொடர்ந்து பராமரிக்கும் வகையில் ஒவ்வொரு மரக்கன்றுக்கும் பாதுகாப்பு வளையம், தண்ணீர் வசதி ஆகியவை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தித் தரப்படும்.

மரங்களை வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. நம் வருங்காலச் சந்ததியினர் பாதுகாக்கப்படுவர். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் முன்னாள் முதல்வர் கருணாநிதி 2006-ல் முதல்வராக இருந்தபோது, “மரத்தை வளர்த்தால், மரம் நம்மை வளர்க்கும்” என்றார். அவருடைய பொன்மொழிகளின்படி முதல்வர் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது” என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ச.தினேஷ்குமார், வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் தலைவர் சிவராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x