Published : 19 Jul 2021 04:27 PM
Last Updated : 19 Jul 2021 04:27 PM

இலங்கைக் கடற்படையினரின் தொல்லை இல்லாமல் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஓபிஎஸ்: கோப்புப்படம்

சென்னை

இலங்கைக் கடற்படையினரின் தொல்லை இல்லாமல், மீனவ மக்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஜூலை 19) வெளியிட்ட அறிக்கை:

"அந்நியச் செலவாணியை ஈட்டுவதிலும், புரதச் சத்துள்ள உணவைப் பெருக்குவதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் தொழில் மீன்பிடித் தொழில் என்றாலும், அந்தத் தொழிலை மேற்கொண்டு வரும் தமிழக மீனவர்கள் பல்வேறு இன்னல்களை, குறிப்பாக இலங்கைக் கடற்படையினரால், சந்தித்து வருகிறார்கள். எனவே, மீன் உற்பத்தியைப் பெருக்குவது, மீனவர்களின் வருவாயைப் பெருக்குவது என்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதும் தமிழக அரசின் கடமையாகும்.

மீன்பிடித் தடைக் காலம் முடிந்து, கடந்த மாதம் 30-ம் தேதி அன்றுதான் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போதிருந்தே, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படும் சம்பவங்களும், அவர்களுடைய வலைகளை அறுத்து கடலில் வீசியெறியப்படும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வருகின்றன.

இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து 17-07-2021 அன்று 400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றதாகவும், அவர்கள் கச்சத்தீவு அருகே, தமிழகத்துக்கு உட்பட்ட பகுதியில், நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, மூன்று கப்பல்களில் வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை மீன்பிடித் தொழில் செய்யவிடாமல் விரட்டி, விரட்டி அடித்ததாகவும், மீன் பிடிப்பதற்காகப் படகுகளிலிருந்து மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை இலங்கைக் கடற்படையினர் அறுத்து கடலில் தூக்கிப் போட்டதாகவும், இதன் காரணமாக குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், மீனவ மக்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக் கடற்படையின் இதுபோன்ற அத்துமீறல் காரணமாக, ராமேஸ்வரம் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட படகுகள் உள்ள நிலையில், பாதிக்கும் குறைவான படகுகளே மீன்பிடிக்கச் சென்று வருவதாகச் செய்திகள் வருகின்றன.

இலங்கைக் கடற்படையினரின் இதுபோன்ற செயல் மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வருமானமும் குறைந்து வருகிறது. இலங்கைக் கடற்படையினரின் தொந்தரவு இல்லாமல் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மீனவ மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே, தமிழக முதல்வர் இதில் உரிய கவனம் செலுத்தி, இலங்கைக் கடற்படையினரின் தொல்லை இல்லாமல், மீனவ மக்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேவைப்படின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியைப் பெற்று மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும், பாதுகாப்புக்கும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x