Last Updated : 19 Jul, 2021 03:47 PM

 

Published : 19 Jul 2021 03:47 PM
Last Updated : 19 Jul 2021 03:47 PM

உயர் நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கு: எச்.ராஜா முன்ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை

உயர் நீதிமன்றம், காவல்துறை குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் எச்.ராஜாவுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம், திருமயம் நீதிமன்றத்தில் ஜூலை 23-ல் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மேடை அமைக்க உயர் நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை அனுமதி மறுத்தது.

இதையடுத்து விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, நீதிமன்றம் மற்றும் காவல்துறையை பகிரங்கமாக விமர்சனம் செய்து பேசினார். இது தொடர்பாக எச்.ராஜா மீது திருமயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் திருமயம் நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் எச்.ராஜா தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்த எச்.ராஜா முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், இந்த வழக்கில் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்துள்ளேன். இருப்பினும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமயம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஜூலை 23-ல் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் என்னைக் கைது செய்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் என ராஜா கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, மனுதாரர் நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாகப் பேசியுள்ளார். இதனால் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் நேரில் ஆஜராக சம்மன்தான் அனுப்பியுள்ளது. அதையேற்று மனுதாரர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x