Last Updated : 19 Jul, 2021 03:49 PM

1  

Published : 19 Jul 2021 03:49 PM
Last Updated : 19 Jul 2021 03:49 PM

மயிலாடும்பாறை அகழாய்வில் இரும்பு வாள், மண் பானைகள் கண்டுபிடிப்பு

மயிலாடும்பாறை அகழாய்வில் கண்டறியப்பட்ட மண் பானை.

கிருஷ்ணகிரி

மயிலாடும்பாறை தொல்லியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் இரும்பு வாள் மற்றும் மண் பானைகளைக் கண்டறிந்துள்ளனர்.

தமிழகத்தில் கீழடி, கொந்தகை, அகரம், கங்கை கொண்ட சோழபுரம், கொற்கை, மயிலாடும்பாறை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மணலூர் ஆகிய 10 இடங்களில் தற்போது அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், கடந்த மார்ச் மாதம் அகழாய்வு தொடங்கப்பட்டது. தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில், மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குநர் சக்திவேல், தொல்லியல் அகழாய்வு அலுவலர்கள் பரந்தாமன், வெங்கடகுரு பிரசன்னா மற்றும் தொல்லியல் ஆய்வு மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்த அகழாய்வில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்திட்டையில் 70 செ.மீ. நீளம் உள்ள இரும்பு வாள் ஒன்றைக் கண்டறிந்தனர்.

இது தொடர்பாக, அகழாய்வு இயக்குநர் சக்திவேல் கூறியதாவது:

"பர்கூர் வட்டம் மயிலாடும்பாறையில், சானரப்பன் மலையில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மலையின் கீழ், 30-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இங்கு முன்னோர்கள் எந்த மாதிரியான வாழ்வியல் முறைகளை மேற்கொண்டனர். உலக அளவில் உள்ள பல்வேறு இனக்குழுக்களில் இவர்கள் எந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை இங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு டிஎன்ஏ சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட உள்ளது.

கடந்த 1980 மற்றும் 2003-ல் இங்கு மேற்கொண்ட ஆய்வுகளில், இவை புதிய கற்காலத்தைச் சேர்ந்த இடம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இரும்பு வாள்

இங்கு கடந்த 3 மாதங்களில் ஆய்வு மேற்கொண்டதில், மனித எலும்புகள் எதுவும் நேரடியாக நமக்குக் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது இங்கு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த, 70 செ.மீ. நீளமுள்ள இரும்பு வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், தற்போது 40 செ.மீ. வாளின் முனைப்பகுதி மட்டும் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. வாளின் கைப்பிடி பகுதி இன்னும் எடுக்கப்படவில்லை. இந்த வாளை ஒரு மண் திட்டை அமைத்து அதன்மேல் வைத்துள்ளனர்.

ஆனால், நாளடைவில் மண்ணின் அழுத்தம் காரணமாக, படிப்படியாக வாள் மேடும் பள்ளமுமாக மாறியுள்ளது. இந்த வாள் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த வாள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. முடிவுகள் வந்தபிறகுதான் இந்த வாளின் சரியான காலத்தைக் கணிக்க முடியும்".

இவ்வாறு சக்திவேல் கூறினார்.

இந்நிலையில், இந்த அகழாய்வில் தற்போது 4 மண் பானைகளைக் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக, ஆய்வு செய்து வருவதாகத் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

தமிழகப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் வாள் படத்தைப் பதிவிட்டு 'ஒடிந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள்' என, 1948-ம் ஆண்டு வெளிவந்த அபிமன்யு திரைப்படத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான வைர வரி எனக் குறிப்பிட்டிருந்தார்.

மயிலாடும்பாறை அகழாய்வில் கண்டறியப்பட்ட இரும்பு வாள்.

இந்நிலையில், தனது வலைதளப் பக்கத்தில் மண் பானை (தாழி) படத்துடன், 'கலம் செய் கோவே! கலம் செய் கோவே! நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே!' - புறநானூறு எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x