Published : 19 Jul 2021 03:12 AM
Last Updated : 19 Jul 2021 03:12 AM

மனித உரிமைப் போராளி ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

சென்னை லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான மறைந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு முதல்வர்மு.க.ஸ்டாலின் நேற்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் 1937-ம் ஆண்டு பிறந்தஸ்டேன் சுவாமி என்று அழைக்கப்படும் ஸ்டானிஸ்லாஸ் லூர்துசாமி, சிறு வயதிலேயே சமூகத் தொண்டாற்றுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். பழங்குடியின மக்களின்உரிமைக்காகவும், மேம்பாட்டுக்காகவும் போராடினார். பழங்குடி மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு, மேம்பாட்டுக்காக பழங்குடியினரை உறுப்பினர்களாகக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார்.

ஜார்க்கண்டில் ஆதிவாசிகள் நிலங்களை பாதுகாக்கும் போராட்டத்துக்காக ஸ்டேன் சுவாமி தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 5-ம் தேதி அவர் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து சென்னை லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், இனிகோஇருதயராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x