Published : 19 Jul 2021 03:13 AM
Last Updated : 19 Jul 2021 03:13 AM

அடையாறில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவுக்கு தொல்காப்பிய பூங்கா என மீண்டும் பெயர் மாற்றம்

சென்னை அடையாறில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவுக்கு தொல்காப்பியப் பூங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பெயர் பலகையும் நிறுவப்பட்டுள்ளது..படம்: பு.க.பிரவீன்

சென்னை

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, கடந்த 2007-ம் ஆண்டு அடையாறு உப்பங்கழியில் 58 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடியில் தொல்காப்பிய பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார். பின்னர் 2011-ம் ஆண்டில் அதைத் திறந்துவைத்தார்.

பின்னர் வந்த அதிமுக அரசு, அப்பூங்காவை அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா என அழைத்து வந்தது. அங்கு தொல்காப்பிய பூங்கா என வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையும் அகற்றப்பட்டிருந்தது. தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அண்மையில் இப்பூங்காவை பார்வையிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் இப்பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டிய அவர், அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். இப்பூங்காவுக்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரிட்டிருந்தவாறு மீண்டும் பெயரிடுமாறு சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கு உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அந்த பூங்காவுக்கு மீண்டும் தொல்காப்பிய பூங்கா என பெயரிடப்பட்டுள்ளது. அந்த பெயரில் பெயர் பலகையும் பூங்காவின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x