Published : 19 Jul 2021 03:13 AM
Last Updated : 19 Jul 2021 03:13 AM

ஆவடி அருகே குடும்ப பிரச்சினையால் இரு குழந்தைகளை கொன்று, தாய் தற்கொலை

ஆவடி அருகே குடும்பப் பிரச்சினையால் இரு குழந்தைகளைக் கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகேயுள்ள திருநின்றவூர் நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்(27). பெயின்டர். இவரது மனைவி கெளரி(24). திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. இவர்களது மகள் தீக்சிதா(3), மகன் அஸ்வின்(1).

மதுப் பழக்கத்துக்கு அடிமையான ரமேஷ் தினமும் மது அருந்தியதுடன், குடும்ப செலவுக்கு பணம் தராமல் இருந்துள்ளார். இதனால், கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை ரமேஷ் மது அருந்த பணம் கேட்டு கெளரியிடம் தகராறு செய்துவிட்டு, பின்னர் வெளியே சென்றுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த கௌரி, வீட்டின் மேற்கூரையில் உள்ள இரும்புக் குழாயில் புடவையால் இரு குழந்தைகளை தனித்தனியாக தூக்கில் தொங்கவிட்டு கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டின் கீழ்தளத்தில் வசிப்பவர் கெளரி வீட்டுக்குச் சென்றபோது, மூவரும் இறந்துகிடந்தது தெரியவந்தது.

போலீஸார் தீவிர விசாரணை

தகவலறிந்து வந்த திருநின்றவூர் போலீஸார் சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இரு குழந்தைகளைக் கொன்று, தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருநின்றவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x