Published : 19 Jul 2021 03:13 AM
Last Updated : 19 Jul 2021 03:13 AM

ஆழ்துளை கிணற்றில் ஆழத்தை காணோம்: அதிர்ச்சியில் விட்டுச் சென்ற அதிகாரிகள்

பெரியகோட்டையில் பயன்பாடின்றி உள்ள ஆழ்துளைக் கிணறு.

காரைக்குடி அருகே ஆழ்துளைக் கிணற்றில் ஆழம் இல்லாததால் ஊரக வளர்ச்சித் துறையினர் அப்படியே விட்டுச்சென்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் 779 ஊரகக் குடியிருப்புகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் விநியோகிக்கப் படுகிறது. மீதமுள்ள 2,452 குடியிருப்புகளுக்கு உள்ளூர் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக கிராமங்களையொட்டிய பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பெரியகோட்டை கிராமத்தில் 350 அடியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது.

ஆனால், சில மாதங்களில் கிணறு வற்றியது. மேலும் மோட்டாரும் பழுதடைந்தது. இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் குழாய்களை அடிமட்ட ஆழம் வரை பொருத்தி தண்ணீர் எடுக்க ஊரக வளர்ச்சித் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், ஆவணத்தில் உள்ளவாறு 350 அடி ஆழத்துக்கு பதிலாக வெறும் 200 அடிக்கும் குறைவான ஆழமே இருந்தது. மேலும் குழாயும் குறிப்பிட்ட அளவுக்கு பொருத்தவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊரக வளர்ச்சித் துறையினர் அப்படியே ஆழ்துளைக் கிணற்றை விட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அரை கி.மீ. நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும்நிலை உள்ளது.

பெரிய கோட்டை முருகேசன் கூறுகையில், குறைவான ஆழமே தோண்டியதால் தண்ணீர் வராமல் போய்விட்டது. ஆழ்துளை கிணறு அமைக்கும்போதே அதிகாரிகள் ஆய்வு செய்திருந்தால் இப்பிரச் சினை ஏற்பட்டிருக்காது.

அந்த ஆழ்துளை கிணற்றை பயன்படுத்த முடியாததால், நிதி வந்ததும் வேறு இடத்தில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதாக கூறுகின்றனர் என்றார்.

இதேபோல் மாவட்டத்தில் பல கிராமங்களில் ஆழ்துளைக் கிணறுகளில் ஆவணத்தில் உள்ள ஆழத்தை விட குறைவான ஆழமே தோண்டப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x