Last Updated : 18 Jul, 2021 07:45 PM

 

Published : 18 Jul 2021 07:45 PM
Last Updated : 18 Jul 2021 07:45 PM

மானாமதுரை அருகே  தடுப்பணை சேதம்; தேங்காமல் சென்ற வைகை நீர்: விவசாயிகள் வேதனை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றில் சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்காததால் நீர் தேங்காமல் செல்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

வைகை ஆற்றுப்படுகையில் உள்ள இடைக்காட்டூர் பகுதியில் நெல், கரும்பு, வாழை 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், ஆற்றில் சிவகங்கை நகராட்சி உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் திட்டங்களுக்காக 19 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து குடிநீர் திட்டங்களுக்காகவும், இடைக்காட்டூர், பதினெட்டான்கோட்டை, வெள்ளிமூஞ்சி, வெள்ளிக்குறிச்சி, அன்னியயேந்தல், முத்தனேந்தல், சிறுகுடி உட்பட கிராமங்கள் பயன்பெறும் வகையிலும் கடந்த 2006-ம் ஆண்டு ரூ.68 லட்சத்தில் இடைக்காட்டூர் தடுப்பணை கட்டப்பட்டது.

இந்த அணை கட்டிய சில மாதங்களிலேயே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக அணையைச் சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிட்டும், தேக்க முடியவில்லை. இதனால் குடிநீர் திட்டங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இடைக்காட்டூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது: தரமில்லாததால் கட்டிய 6 மாதங்களிலேயே தடுப்பணை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பலமுறை கோரிக்கை வைத்தும் சீரமைக்கவில்லை. அணையைத் தரமின்றி கட்டிய நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. சமீபத்தில் வைகை ஆற்றில் தண்ணீர் சென்றும் எங்கள் பகுதிக்கு பயனில்லாமல் போனது.

மேலும், கடந்த காலங்களில் அணையில் தண்ணீர் தேக்க முடியாததால் குடிநீர் திட்டங்களுக்கான ஆழ்துளைக் கிணறுகள் வற்றின. அணையில் தண்ணீர் தேங்கினால் தான் விவசாயக் கிணறுகளின் நீர்மட்டம் உயரும்.

இதன் மூலம் கோடைக் காலங்களில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியும். இதனால் அணையைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x