Last Updated : 18 Jul, 2021 04:59 PM

 

Published : 18 Jul 2021 04:59 PM
Last Updated : 18 Jul 2021 04:59 PM

வெளிநாட்டில் உள்ள சகோதரியிடம் முருகன், நளினி காணொலி மூலம் பேச்சு: தாயாருடன் பேச நாளை ஏற்பாடு

சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவின்படி, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், நளினி ஆகியோர் லண்டனில் உள்ள முருகனின் சகோதரியிடம் காணொலி காட்சி மூலம் இன்று (ஜூலை.18) பேசினர்.

மேலும், இலங்கையில் உள்ள முருகனின் தாயாரிடம் பேசுவதற்கு திங்கள்கிழமை (நாளை) ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில், முருகன் வேலூர் மத்திய ஆண்கள சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது.

இதனிடையே, சென்னையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நளினியின் தாயார் பத்மாவை உடனிருந்து கவனிக்கவும், கடந்த ஆண்டு உயிரிழந்த முருகனின் தந்தைக்கு சடங்குகள் செய்யவும் தங்களை 30 நாட்கள் ‘பரோவில்’ விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முருகனும், அவரது மனைவி நளினியும் கடந்த மே மாதம் விடுத்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவு செய்து, தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

ஆனால், இதுவரை அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் எந்தத் தீர்வும் காணப்படாமல் இருக்கிறார். தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீதான முடிவு தெரியும் வரை 1983 தமிழக சிறைகள் விதி 40-இன் கீழ் தமிழக அரசு தனக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு தங்களுக்கு நீண்டகால பரோல் விடுப்பு வழங்கிட வேண்டும் என்றும் கடந்த வாரம் நளினி, முருகன் தரப்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன் மீதும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்பதால், லண்டனில் உள்ள முருகனின் சகோதரி ராஜி, இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமணியம்மாள் ஆகியோருடன் முருகனும், நளினியும் காணொலி காட்சி மூலம் பேச அனுமதிக்கக்கோரி நளினியின் தாயார் பத்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் பேசுவதற்கு முருகன், நளினியை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. அதன்பேரில், முருகன், நளினியை வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடம் பேச வைப்பதற்கான அனுமதி ஆணையை, மத்திய அரசு வேலூர் மத்திய சிறைக்கு நேற்று அனுப்பி வைத்திருந்தது.

அதன் அடிப்படையில், முருகன், நளினி ஆகியோர் இன்று (ஜூலை.18) மாலை 4.30 மணியளவில் காணொலி காட்சி மூலம் லண்டனில் உள்ள முருகனின் சகோதரி ராஜியிடம் பேசியுள்ளனர். அப்போது, தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இலங்கையில் உள்ள முருகனின் தாய் சோமணியம்மாளிடம் அவர்களால் பேச முடியவில்லை எனக்கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x