

பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே கைவிடுங்கள் என்றும், மீறும் திமுகவினர் மீது தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பியுமான ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆர்.எஸ். பாரதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் இன்னும் கூட ஆங்காங்கே தொண்டர்களும் - திமுக நிர்வாகிகளும் பேனர்களை வைப்பது தொடர்கிறது. போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் சென்ற அ.தி.மு.க. ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட பேனர் கலாச்சாரத்தால் மரணங்களும், விபத்துக்களும் நிகழ்ந்தன. இந்நிலையில் - “எங்கள் கட்சியின் சார்பில் பேனர்கள் வைக்கமாட்டோம்” என்று முதன் முதலில் உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தது என்பதைக் திமுகவினர் அனைவரும் அறிவீர்கள்.
அதன்பிறகு, திமுகவினர் பெரும்பாலானோர் பேனர் வைக்கும் பழக்கத்தைக் கைவிட்டனர் என்றாலும், ஒரு சிலர் இன்னும் பேனர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளைக் திமுக ஒருபோதும் அனுமதிக்காது.
ஆகவே அனுமதியின்றி பேனர்கள் ஏதும் இனி வைக்கவே கூடாது என்று திமுகவினர்அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். திமுக தலைவர் அவர்களின் ஆணையை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.