Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக இருந்து தப்பிய ஆசிரியர்கள் வீட்டில் சம்மன் ஒட்டியது சிபிசிஐடி

சென்னை

சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக செயல்பட்ட பள்ளி ஆசிரியர்கள் சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா (79). இவர் தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

3 மாணவிகள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் இவர் மீது தனித்தனியாக 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவருக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீதும் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, சிவசங்கர் பாபாவுக்கு உதவிய ஆசிரியர், ஆசிரியை, ஊழியர்களுக்கு சிபிசிஐடி போலீஸார் தபாலில் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால், வழக்கில் தொடர்புடைய ஆசிரியர்கள் சம்மனை பெற்றுக் கொள்ளாமல், வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகினர். விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதற்காக அவர்கள் சம்மன் பெறாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஆசிரியை காயத்ரி, பிரவீனா ஆகியோரது வீட்டில் சம்மனை சிபிசிஐடி போலீஸார் ஒட்டியுள்ளனர். குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி அவர்களது வீடுகளில் சம்மன்ஒட்டப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர்களைதேடும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x