மசினகுடி அருகே மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள ‘ரிவால்டோ' யானையை வனத்தில் விடுவிக்க உத்தரவு

மசினகுடி அருகே மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள ‘ரிவால்டோ' யானையை வனத்தில் விடுவிக்க உத்தரவு
Updated on
1 min read

மசினகுடி அருகே வாழைத் தோட்டத்தில் மரக்கூண்டில் அடைக்கப் பட்டுள்ள ரிவால்டோ யானையை வனத்தில் விடுவிக்க, தலைமை வன உயிரின காப்பாளர் சேகர்குமார் நீரஜ் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வாழைத்தோட்டம், மாவனல்லா ஆகிய பகுதிகளில் 45 வயதுடைய ரிவால்டோ என்ற காட்டு யானை சுற்றித்திரிந்தது. தும்பிக்கையில் ஏற்பட்ட காயம், கண் பார்வை குறைபாடு காரணமாக வனப்பகுதிக்குள் செல்லாமல், குடியிருப்புப் பகுதிகளிலேயே நடமாடிய ரிவால்டோ யானை, விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இந்த யானையை, கடந்த மே 5-ம் தேதி பிடித்த வனத்துறையினர், கரால் எனும் மரக்கூண்டில் அடைத்து, 50 நாட்களுக்கும் மேலாக மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரிவால்டோ யானையின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்யவும், வனப் பகுதியில் விடுவிப்பதா அல்லது முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு அழைத்துச் சென்று பராமரிப்பதா என்பது குறித்து ஆய்வு செய்யவும் தமிழக வன கால்நடைத் துறையின் முன்னாள் உதவி இயக்குநர் மனோகரன் தலைமையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்லைக்கழக பேராசிரியர் தர்மசீலன், எஸ்பிசிஏ உறுப்பினர் ரமா, உலகளாவிய வனவிலங்குகள் நிதியம் ஒருங்கிணைப்பாளர் பூமிநாதன், மோகன்ராஜ், ஓசை அமைப்பின் நிறுவனர் காளிதாசன், உதகை அரசு கலைக் கல்லூரி வன உயிரியல்துறை உதவிப் பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர், வாழைத்தோட்டம் பகுதியிலுள்ள மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள ரிவால்டோ யானையை இன்று (நேற்று) மாலை ஆய்வு செய்து, ஆய்வறிக்கையை வனத்துறையினரிடம் சமர்ப்பித்துள்ளனர். அதில் பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளனர். இந்நிலையில், மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள காட்டு யானை ரிவால்டோவை வனத்தில் விடுவிக்க தலைமை வன உயிரின காப்பாளர் சேகர்குமார்நீரஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் காந்த் கூறும்போது, "தலைமை வனஉயிரின காப்பாளரின் உத்தரவின்படி, ரிவால்டோவை விடுவிக்கப்படுவதற்கு முன்பாக, அதற்கு ரேடியோ காலர் அணிவிக்கப்படும். பின்னர், பிரத்யேக வாகனத்தில் அபயரண்யம் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு சூரிய மின்வேலி அமைக்கப்பட்ட பகுதியில் முதலில் விடுவிக்கப்படும். அந்த பகுதியில் யானை பழக்கப்பட்டவுடன், வனத்தில் முழுமையாக விடுவிக்கப்படும். இதற்கான திட்டம்வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in