Published : 18 Jul 2021 03:15 AM
Last Updated : 18 Jul 2021 03:15 AM

ஞாயிறு, பொது விடுமுறை நாட்களில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

சென்னை

சென்னையில் இன்றுமுதல் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து சென்னையில் மெட்ரோ ரயில்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரையில் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரையில் இயக்கப்பட்டு வருகின்றன. நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு வழிகாட்டுதல்கள் படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, முககவசம் இன்றி வந்த 46 பயணிகளிடமிருந்து இதுவரையில் ரூ.9200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சென்னையில் இன்று முதல் ஞாயிறுகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

12 லட்சம் பயணிகள்

கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சென்னையில் இதுவரையில் 12 லட்சத்து 37 ஆயிரத்து 552 பேர் பயணம் செய்துள்ளனர். குறிப்பாக நேற்று முன்தினம் மட்டும் அதிகபட்சமாக 69 ஆயிரத்து 794 பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x