Published : 17 Jul 2021 08:35 PM
Last Updated : 17 Jul 2021 08:35 PM

தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக மோடி அரசு செயல்படாது என நம்புவோம்: தொல்.திருமாவளவன்

மதுரை

மேகதாது அணை பிரச்சினையில் தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக மோடி அரசு செயல்படாது என நம்புவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது

இந்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழ்நாட்டின் சார்பில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான குழு சந்தித்தது.

தமிழக தரப்பு கருத்துக்களைக் கேட்டுக்கொண்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சர், தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்டப்படாது என்று உறுதியளித்திருக்கிறார். தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக மோடி அரசு செயல்படாது என்று நம்புவோம்.

நீட் தேர்வில் தமிழக மக்களின் விருப்பத்தை தெரிந்து கொள்வதற்காக நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளார் தமிழக முதல்வர். அக்குழு விவரமான அறிக்கையை அளித்துள்ளது.

எனவே அதன் மீதான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும். இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு தமிழக அரசு பயிற்சி அளித்து வருகிறது. ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை நமக்கு சாதகமாக அமையும் என நம்புகிறோம்.

மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ள ஒப்பந்தப் பணியாளரைப்போல மேலும் பல துப்புரவுப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்று பாதிக்கப்பட்டுள்ள துப்புரவு பணியாளர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x