Published : 17 Jul 2021 04:54 PM
Last Updated : 17 Jul 2021 04:54 PM

இறப்புச் சான்றிதழுடன் ஆதார் விவரங்கள் இணைப்பு குறித்த வழக்கு: உயர் நீதிமன்றம் நம்பிக்கை

வாக்காளர் பட்டியலில் இறந்த நபர்களின் பெயரை நீக்கும் வகையில், இறப்புச் சான்றிதழ்களில் ஆதார் விவரங்களை இணைப்பது குறித்து தேர்தல் ஆணையமும், நாடாளுமன்றமும்தான் முடிவெடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களையும், இரட்டைப் பதிவுகளையும் நீக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த சைலப்ப கல்யாண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் வகையில், அவர்களின் இறப்புச் சான்றிதழ்களில் ஆதார் விவரங்களை இணைக்கலாம் எனவும், அதன் மூலம் இறந்த வாக்காளர்கள் குறித்த விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் மனுதாரர் தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது சம்பந்தமாக நாடாளுமன்றமும், தேர்தல் ஆணையமும்தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், மனுதாரரின் யோசனையைத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

அதேசமயம், வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் சிறந்த நடைமுறையைத் தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x