Published : 17 Jul 2021 04:37 PM
Last Updated : 17 Jul 2021 04:37 PM

அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பா?- பள்ளிக் கல்வி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசுப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா எனப் பள்ளிகளில் ஆய்வு நடத்தி, பள்ளிக் கல்வி ஆணையருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரைக்கும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படுவதாகக் கூறி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக உள்ள முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

கட்டணம் வசூலித்த தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சனைப் பணிநீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பெற்றோர் ஆசிரியர் சங்க இணைப்புக் கட்டணமான 50 ரூபாயைத் தவிர கூடுதல் கட்டணம் எதையும் வசூலிக்கக் கூடாது என அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கும்படி பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.பாஸ்கர் ஆஜரானார். அவரது வாதத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும், வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

இது தொடர்பாக அனைத்துத் தலைமைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதி, இந்தச் சுற்றறிக்கையை அனைத்துப் பள்ளிகளின் அறிவிப்புப் பலகையில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என, பள்ளிகளில் ஆய்வு நடத்தி, பள்ளிக் கல்வி ஆணையருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

மாவட்ட வாரியாக அறிக்கைகளைப் பெற்று, அதன் அடிப்படையில் பள்ளிக் கல்வி ஆணையர், ஜூலை 27ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x