Published : 17 Jul 2021 04:55 PM
Last Updated : 17 Jul 2021 04:55 PM

திரையரங்குகளில் வாகனங்களுக்கான கட்டணத்தை அதிகரிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

திரையரங்குகளில் வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான கட்டணத்தை அதிகரிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

திரையரங்குகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான கட்டணங்களை நிர்ணயித்து, தமிழக அரசு, 2017-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. அதில், மாநகராட்சிகளில் உள்ள திரையரங்க வாகன நிறுத்துமிடங்களில், நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது.

அதேபோல, நகராட்சிகளில் நான்கு சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 7 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது. பேரூராட்சி, கிராமப் பஞ்சாயத்துகளில், நான்கு சக்கர வாகனங்களுக்கு 5 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 3 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்து, கட்டணத்தை அதிகரிக்கக் கோரி வாகன நிறுத்துமிடத்துக்கு உரிமம் பெற்ற இளவரசு என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் மஞ்சுளா அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 17) விசாரணைக்கு வந்தபோது, தங்கள் தரப்பு கருத்தைக் கேட்காமலும், நிலத்தின் மதிப்பைக் கணக்கில் கொள்ளாமலும் அரசு, கட்டணத்தை நிர்ணயித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு, கட்டணம் நிர்ணயித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளதாகவும், கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றால், அது பொது நலனுக்கு எதிரானது என்றும் கூறி, அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனத் தெரிவித்து, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், கட்டணத்தை அதிகரிக்கக் கோரி மனுதாரர் அரசை அணுக இந்த உத்தரவு தடையாக இருக்காது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x