Published : 17 Jul 2021 03:24 PM
Last Updated : 17 Jul 2021 03:24 PM

திமுக குறித்து அண்ணாமலை விமர்சனம்; விளம்பரத்துக்காகப் பேசுகின்றனர்: அமைச்சர் சேகர்பாபு பதிலடி

அமைச்சர் பி.கே.சேகர்பாபு - அண்ணாமலை: கோப்புப்படம்

சென்னை

விளம்பரம் கிடைப்பதற்காக திமுகவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்ததாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திருச்செந்தூர் கோயில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று (ஜூலை 17) சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டபின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், "திருச்செந்தூர் கோயிலின் ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று இருக்கிறது. கடந்த மாதத்துடன் திருச்செந்தூர் முருகன் கோயிலின் குடமுழுக்குத் தேதி நிறைவுபெற்றிருக்கிறது.

குடமுழுக்குடன் சேர்த்து அனைத்து அடிப்படைத் தேவைகளையும், நிறைவேற்றுவதற்கு உண்டான பணியைத் தொடங்குவதற்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அடுத்த மாதம் மீண்டும் ஒரு ஆய்வுக்கூட்டம் நடைபெறும். முதல்வர் இறுதி முடிவு எடுத்தபின் அதற்குண்டான பணிகள் தொடங்கப்படும்" என்றார்.

கோயில் நிலங்களைப் பராமரிப்பதில் அலட்சியம் நிலவுவதாக, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, "நீதிமன்றத்தின் கருத்தில் அதிகமாக உள்ளே நுழையக் கூடாது. இருந்தாலும், நீதிபதிகளின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு, இன்னும் அவர்களே திருப்தியடையும் அளவுக்கு எங்களுடைய பணிகள் தொடரும். முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் பொற்காலமாக மாற்றுவதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என்றார்.

நேற்று (ஜூலை 16) புதிதாகப் பதவியேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சிக்கு வந்து 70 நாட்களில் ஒரு தேர்தல் வாக்குறுதியைக்கூட நிறைவேற்றவில்லை என விமர்சித்தது குறித்த கேள்விக்கு, "ஒருசில நேரங்களில் ஒரு சிலரைப் பற்றிக் கூறினால்தான் அவர்களுக்கு முகாந்திரம் கிடைக்கும். விளம்பரம் கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x