Published : 17 Jul 2021 03:12 AM
Last Updated : 17 Jul 2021 03:12 AM

நாடு முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுகிய தூர ரயில்களின் சேவை தொடங்குவது எப்போது?

நாடு முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்பதிவு இல்லாத குறுகிய தூர பயணிகள் ரயில்களின் சேவை மீண்டும் தொடங்குவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

இந்திய ரயில்வேயில் இயக்கப்பட்டு வந்த 13,349 பயணிகள் ரயில்களில் தினமும் 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம்செய்தனர். இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்க, வழக்கமான பயணிகள் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வால், பல முக்கிய வழித்தடங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், ஏற்கெனவே இயக்கப்பட்டுவந்த குறுகிய தூர முன்பதிவு இல்லாதபயணிகளின் ரயில் சேவை இன்னும்தொடங்கப்படவில்லை. அந்த வகையில் நாடு முழுவதும் 3 ஆயிரம் ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தெற்கு ரயில்வேயில் 450-க்கும் மேற்பட்ட குறுகிய தூர பயணிகளின்ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், விழுப்புரம் - மதுரை,அரக்கோணம் - சேலம், திருச்சி - ராமேசுவரம் ஆகிய குறுகிய தூர ரயில்கள் சிறப்பு முன்பதிவு ரயில்களாக இயக்கப்படுகின்றன. முழு அளவில் முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கப்படாததால், பல்வேறு மாநிலங்களில் மாவட்டங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பெரும்பாலான மக்கள் தங்களது அன்றாட பணிகளுக்குச் சென்று வருகின்றனர். அதன்படி, பொதுபோக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. விரைவு ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன. சென்னை, மும்பை போன்ற கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், மாவட்டங்கள், நகரங்களை இணைக்கும் குறுகிய தூர முன்பதிவு இல்லாத ரயில்களின் சேவை தொடங்கவில்லை. இதனால், இந்த ரயில்களை நம்பியுள்ள மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். சில பகுதிகளில் ரயில்போக்குவரத்தை மட்டுமே நம்பியுள்ள மக்களும் இருக்கின்றனர். எனவே, சில கட்டுப்பாடுகளை வகுத்து, குறுகிய தூர முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

டிஆர்இயு மூத்த நிர்வாகி மனோகரன் கூறும்போது, ‘‘கரோனா தாக்கத்தால் ரயில்வேக்கு பயணிகள் பிரிவில் வருவாய் மிகவும் குறைந்து விட்டது. தமிழகத்தில் 75 சதவீத பேருந்துகள் ஓடத்தொடங்கிவிட்டன. எனவே, மாவட்ட, நகர மக்கள் வந்து செல்ல வசதியாக குறுகிய தூர பயணிகளின் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். மேலும்,மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், பத்திரிகையாளர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 53 வகையானகட்டண சலுகைகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும்’’ என்றார்.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா தாக்கம்குறைந்துள்ளதால் நீண்ட தூர ரயில்கள் மற்றும் மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் வரத் தொடங்கியுள்ளது. மத்திய, மாநில அரசின் வழிகாட்டுதல் படி, ரயில்வே வாரியத்தின் அனுமதியுடன் படிப்படியாக ரயில்களை இயக்கி வருகிறோம். கரோனா தாக்கம் மேலும் குறையும்போது, அரசுகளின் அனுமதியுடன் கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x