Published : 17 Jul 2021 03:13 AM
Last Updated : 17 Jul 2021 03:13 AM

மணல் கடத்தலில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக நிர்வாகியை கைது செய்ய தனிப்படை: இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி உத்தரவு

மணப்பாறையில் மணல் கடத்தல் வழக்கில் தொடர்புடைய, சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக நிர்வாகியை தனிப்படை போலீஸார்தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பணியில் அலட்சியமாக இருந்தபோலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மணப்பாறை முத்தப்புடையான்பட்டி பகுதியில் கடந்த 12-ம் தேதி இரவு மணல் கடத்தல் தொடர்பான தகவலின்பேரில் தனிப்படைபோலீஸார் 2 டிப்பர், ஒரு பொக்லைன் ஆகியவற்றை பறிமுதல்செய்து மணப்பாறை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆரோக்கியசாமி, காவல் நிலையத்தில் இருந்து அந்த வாகனங்களை எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பான குற்றச்சாட்டின்பேரில் ஆரோக்கியசாமியை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை நேற்று முன்தினம் அறிவித்தது.

இதற்கிடையே தனிப்படையினர் பறிமுதல் செய்து வைத்திருந்த வாகனங்களை, காவல் நிலையத்தில் இருந்து எடுத்துச் சென்றது தொடர்பாக ஏடிஎஸ்பி பால்வண்ணநாதன், டிஎஸ்பி வீரமணி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மணப்பாறை காவல் நிலையத்துக்குச் சென்றுவிசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து பணியில் அலட்சியமாக இருந்ததற்காக மணப்பாறை இன்ஸ்பெக்டர் அன்பழகனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரகடிஐஜி ராதிகா உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், மணல் கடத்தல் தொடர்பாக மணப்பாறை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள ஓட்டுநர்கள் வெள்ளிவாடியைச் சேர்ந்த மனோகர் (36), முத்தப்புடையான்பட்டியைச் சேர்ந்த பவுல்சேகர்(28), கார்த்திகேயன்(25), கீழக்களத்தைச் சேர்ந்த அருள் சேசுராஜ் (28), சவுரி (51) ஆகியோரிடம் விசாரித்தபோது, ஆரோக்கியசாமி கூறியதால் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து தனிப்படை அமைத்து ஆரோக்கியசாமியைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x