Published : 17 Jul 2021 03:14 AM
Last Updated : 17 Jul 2021 03:14 AM

கோயில் நிலத்தில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிப்பதற்கு வேறு யாருக்கும் உரிமையில்லை: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

சென்னை

கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க கோயில் நிர்வாகத்தைத் தாண்டி வேறு யாருக்கும் உரிமை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரத்தில் உள்ள சேஷபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு, கிராம பஞ்சாயத்து தலைவர் கட்டணம் வசூலித்து வருவதாகவும், இதற்கு தடை விதிக்கக் கோரியும் ராமு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘சேஷபுரீஸ்வரர் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், கோயில் நிலத்தில் வாகனங்கள் நிறுத்த பஞ்சாயத்து தலைவர் கட்டணம் வசூலிக்க எந்த உரிமையும் இல்லை.

கோயில் நிலத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு கோயில் நிர்வாகத்தைத் தாண்டி கட்டணம் வசூலிக்க வேறு யாருக்கும் உரிமை இல்லை’’ என உத்தரவிட்டனர்.

மேலும், இதுவரை கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை குறித்த கணக்குகளை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவருக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், வசூலிக்கப்பட்ட தொகையை அறநிலையத்துறை வசம் ஒப்படைக்க அறிவுறுத்தி விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x