Published : 17 Jul 2021 03:14 AM
Last Updated : 17 Jul 2021 03:14 AM

புதுச்சேரியில் கரோனாவுக்காக பொதுமக்கள் செலவு செய்த தொகையை 3 மாதங்களில் திருப்பி வழங்க உத்தரவு

புதுச்சேரியில் கரோனா சிகிச்சைக்காகபொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளி்ல் செலவு செய்த தொகையை சம் பந்தப்பட்ட நபர்களுக்கு 3 மாதங்களில் திருப்பி வழங்க வேண்டுமென புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா 2-வது அலையை சமாளிக்கும் வகையில் புதுச்சேரி அரசு சார்பில், புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் பொது மக்களிடம் எந்தவொரு கட்டணமும் வசூலிக்கக்கூடாது என புதுச்சேரி அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அரசின் இந்த உத்தரவை மீறி புதுச்சேரி அரியூரில் உள்ள வெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், அங்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் இசிஜி, எக்ஸ்ரே, ஸ்கேன் என நேரடியாக கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்துள்ளதாகவும், எனவே அரசு உத்தரவுப்படி புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவச சிகிச்சையளிக்கவும் உத்தரவிடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் ஏ.ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.என்.சுமதியும், புதுச்சேரி அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் என்.மாலாவும், தனியார் மருத்துவமனை சார்பில் வழக்கறிஞர் எல்.சுவாமிநாதனும் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது தனியார் மருத்துவமனை தரப்பில், ‘‘கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த வகையில் செலவான ரூ. 2.90 கோடியை வழங்குமாறு புதுச்சேரி அரசுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி அரசு தரப்பில், ‘‘ இந்த பட்டியலை சரிபார்த்து அந்த தொகையை வழங்க அவகாசம் வேண்டும் என்பதால் இந்த வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும், என கோரினார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெறுவதற்காக பொதுமக்கள் செலவு செய்த தொகையை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 3 மாதங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர். அதேபோல தனியார் மருத்துவமனைக்கான தொகையையும் புதுச்சேரி அரசு திருப்பி வழங்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x