Last Updated : 16 Jul, 2021 08:16 PM

 

Published : 16 Jul 2021 08:16 PM
Last Updated : 16 Jul 2021 08:16 PM

கரோனாவால் நிறுத்தம்: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நாளை முதல் தொடக்கம்

முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மாற்றிக்கொள்ளும் ப்ரண்டியர் லைஃப் லைன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் செரியன், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அருண்.

புதுச்சேரி

கரோனா நோய்த்தொற்றால் இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இதய அறுவை சிகிச்சை நாளை முதல் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் தொடங்கப்படுகிறது என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை ப்ரண்டியர் லைஃப் லைன் மருத்துவமனையுடன் இணைந்து இதய அறுவை சிகிச்சை தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் 234 இதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டன.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இதய அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தற்போது இந்த அறுவை சிகிச்சைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

அதற்காக இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ப்ரண்டியர் லைஃப் மருத்துவமனை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மீண்டும் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் இன்று மாலை கையெழுத்தானது.

ப்ரண்டியர் லைஃப் லைன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் செரியன், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அருண் ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இதுபற்றி முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "கரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இதய அறுவை சிகிச்சைகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு வாரத்திற்கு மூன்று பேருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதுவரை 234 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அனைத்து சிகிச்சைகளும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன.

ஒரு வாரத்துக்கு 6 முதல் 10 பேருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. புதுச்சேரியில் உள்ள மருத்துவர்களும், சென்னையிலுள்ள மருத்துவர்களும் காணொலி மூலம் பேசி, நோயாளிகளுக்கு எந்த முறையில் அறுவை சிகிச்சை செய்வது என்பது குறித்து ஆலோசனை செய்யப்படும். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் சென்னை செல்லாமலே புதுச்சேரியில் தரமான இதய சிகிச்சை பெற முடியும். சுகாதாரத்துறை மூலம் புதுச்சேரியில் மக்களுக்குத் தரமான சுகாதாரமான சிகிச்சையை அரசு அளித்து வருகிறது. இதனை ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

மருத்துவத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "நோயாளிகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்படும். அதற்கான தொகையை அரசு செலுத்தும். முதல் கட்டமாக நாளை மூவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x