ஐடிஐ வகுப்புகளைத் தொடங்கக் கோரி வழக்கு: அரசு முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 

ஐடிஐ வகுப்புகளைத் தொடங்கக் கோரி வழக்கு: அரசு முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 
Updated on
1 min read

தொழிற்பயிற்சி வகுப்புகள் தொடங்காததால் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வகுப்புகளைத் தொடங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அரசு உரிய முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் மூலம், 16 மாவட்டங்களில் கூட்டுறவு பட்டயப் பயிற்சியும், 9 மாவட்டங்களில் ஐடிஐ கல்வி நிறுவனங்கள் மூலம், தையல், கணிப்பொறி, எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட தொழிற்கல்விப் பயிற்சிகளை வழங்கி வருகிறது.

இந்த ஐடிஐ கல்வி நிறுவனங்களில், ஃபிட்டர், வெல்டர், மோட்டார் வாகனப் பழுது நீக்கம், ஏசி மெக்கானிக் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க முடிவுசெய்து, 5 கோடி ரூபாய் செலவில் உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன.

2012ஆம் ஆண்டு இந்தத் தொழிற்பயிற்சி வகுப்புகளைத் தொடங்க முடிவுசெய்து, முதலீடு செய்தபோதும், இதுவரை வகுப்புகளைத் தொடங்கவில்லை எனக் கூறி, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சேகர் என்பவர் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழிற்பயிற்சி வகுப்புகள் தொடங்காததால் 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வகுப்புகளைத் தொடங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவை எட்டு வாரங்களில் பரிசீலித்து, தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in