Published : 16 Jul 2021 12:09 PM
Last Updated : 16 Jul 2021 12:09 PM

தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? - மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

முதல்வர் மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம், மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் 2,405 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,633 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 49 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். 3,006 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனிடையே, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, கடந்த 12-ம் தேதி முதல் தமிழகத்தில் அமலில் இருந்து வருகிறது. இதன்படி, கடைகளைத் திறந்து வைப்பதற்கான நேரம் இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டது. வெளிமாநிலங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், புதுச்சேரிக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன. உணவகங்கள், தேநீர்க் கடைகள் இரவு 9 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை நீடிக்கிறது. பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

தமிழகத்தில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 19-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 16) தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கலந்துகொண்டார்.

இதில், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகளைத் திறக்க சாத்தியக்கூறுகள் உள்ளனவா என ஆலோசிக்கப்படுகிறது. கடைகள், உணவகங்கள், தேநீர்க் கடைகளைத் திறந்துவைக்கும் நேரம் நீட்டிக்கப்படலாம் எனவும், வெளிமாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவை வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x