Published : 16 Jul 2021 03:11 AM
Last Updated : 16 Jul 2021 03:11 AM
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்துக்கான ராக்கெட்டில் பயன்படுத்தும் திரவ எரிபொருள் நிரப்பிய விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளித் துறையில் பல்வேறு அரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக விண்ணுக்கு மனிதர்களைஅனுப்பும் திட்டத்தை இஸ்ரோசெயல்படுத்தி வருகிறது. ‘ககன்யான்’ என பெயரிடப்பட்டுள்ள இந்ததிட்டம், ரூ.10 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவின் 75-வது சுதந்திரதினம் கொண்டாடப்படும் 2022-ம்ஆண்டு இறுதியில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ககன்யான் விண்கலத்தில் 3 வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். இதற்கானமுன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விண்வெளியில் தாழ்வான நிலையிலிருந்து பூமியை 7நாட்கள் சுற்றிவரும் வகையில் ககன்யான் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான உபகரணங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்து வழங்கி வருகிறது. இதற்காக டிஆர்டிஓ-வுடன் இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில், இந்த ராக்கெட்டில் பயன்படுத்தப்பட உள்ள திரவ எரிபொருள் நிரப்பிய விகாஸ் இன்ஜின் சோதனை 3-வது முறையாகமேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை திட்டமிட்ட நேரத்துக்குள் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், ‘‘3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்காக வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் நிரப்பிய விகாஸ் இன்ஜின் சோதனை, திருநெல்வேலியில் உள்ள மகேந்திரகிரி திரவ இயக்க உந்தும வளாகத்தில் 240 விநாடிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT