Published : 16 Jul 2021 03:11 AM
Last Updated : 16 Jul 2021 03:11 AM

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒருசில மாவட்டங் களில் கனமழை பெய்யக் கூடும்.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 16-ம் தேதி (இன்று) நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

17-ம் தேதி நீலகிரி, கோவை, தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திரு வள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், இதர வடமாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

18, 19-ம் தேதிகளில் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.

15-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 10 செமீ, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 செமீ, நீலகிரி மாவட்டம் மேல்பவானியில் 7 செமீ, பந்தலூரில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

17-ம் தேதி வரை தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். எனவே அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x