Published : 16 Jul 2021 03:11 AM
Last Updated : 16 Jul 2021 03:11 AM

கிருஷ்ணாம்பதி குளத்தின் நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து அகற்றம்

கோவை கிருஷ்ணாம்பதி குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 76 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இடித்து அகற்றினர்.

மாநகராட்சி பகுதிகளில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும், குளங்களை சுற்றி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றி வருகின்றனர்.

அந்த வகையில், கோவை பி.என்.புதூர் கோகுலம் காலனியில் கிருஷ்ணாம்பதி குளத்துக்கு செல்லும் வாய்க்காலை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. இவற்றை இடிக்க ஏற்கெனவே மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டது. இதற்காக வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோவைப்புதூர் திரு.வி.க. நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டன. வீடுகள் ஒதுக்கப்பட்டவர்கள் குடிபெயர்ந்து சென்றதை தொடர்ந்து, ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி நகரமைப்பு திட்ட அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.

3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. மாற்று வீடுகளுக்கு செல்லாமல் இருந்த பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் கலைந்து போக செய்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கிருஷ்ணாம்பதி குளக்கரை மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த குளத்துக்கு கோவில்மேடு பள்ளத்தில் இருந்து தண்ணீர் வருவதற்காக வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு 76 வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. இந்த வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட்ட பிறகே இடிக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் மழைக்காலங்களில் அதிகளவு நீர் குளத்துக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x